1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 11 ஜூன் 2025 (08:23 IST)

ஜாதி சான்றிதழில் ‘இந்து’ பெயர் நீக்கம்.. அரசு சலுகை பெறுவதில் மாணவர்களுக்கு சிக்கல்..!

ஜாதி சான்றிதழில் 'இந்து' என்ற பெயர் நீக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் அரசு சலுகைகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஜாதி சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஜாதியை வைத்து அரசு சலுகைகளையும், திட்டங்களையும் பெற முடியும். இதுவரை  'இந்து வேளாளர்', 'இந்து நாடார்' என ஜாதிக்கு முன்பு 'இந்து' என்ற வார்த்தை இடம் பெறும் வகையில்  ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது 'இந்து' என்ற வார்த்தை நீக்கப்பட்டு, வெறும் ஜாதி பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதனால், மாணவர்கள் அரசு சலுகையைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது. உதாரணமாக, இந்து வன்னியர் என்பது டி.என்.சி. பிரிவில் வரும். ஆனால், கிறிஸ்துவ வன்னியர் என்பது பி.சி. பிரிவில் வரும். மதத்தைக் குறிப்பிடாமல் வெறும் ஜாதியை மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கான அரசு சலுகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். 
 
இந்த நிலையில், 'இந்து' என்ற பெயரை ஜாதி சான்றிதழில் நீக்கியதற்கு இந்து முன்னணி மாநில தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மாணவர்களின் உரிமையைத் தட்டிப் பறிக்கும் என்றும், நிர்வாக ரீதியாக குளறுபடியை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வாக்குகளுக்காகப் பிற மதங்களைத் தூக்கிப் பிடிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva