பிரபல தெலுங்கு ஹீரோவான நந்தமூரி பாலகிருஷ்ணா தனது படங்களில் வரும் அசாதாரண ஆக்ஷன் காட்சிகள் பற்றி பேசியுள்ளார்.
தெலுங்கில் பிரபல ஹீரோவான நந்தமூரி பாலகிருஷ்ணாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முக்கியமாக இவரது ஆக்ஷன் காட்சிகள் தெலுங்கு சினிமாவில் மாஸாக பார்க்கப்பட்டாலும், மற்ற மொழி ரசிகர்களிடையே தமாஸாக பார்க்கப்படுகிறது.
ரயிலை ஒற்றை விரலை சுற்றிக் காட்டி ரிட்டர்ன் அனுப்புவது, அடியாட்களை க்ராவிட்டியை தாண்டி பறக்கவிடுவது, ரப்பர் பந்து போல அடித்து ஜம்ப் அடிக்க வைப்பது என படத்துக்கு படம் ரகரகமாக ஆக்ஷன்களை அள்ளித் தெளிப்பவர் பாலகிருஷ்ணா.
தற்போது இவரது அகண்டா 2 படத்தின் டீசர் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த படத்தில் அகோரியா பாலையா நடித்துள்ள நிலையில் முதல் பாகத்தை இயக்கிய போயபட்டி ஸ்ரீனு இந்த படத்தையும் இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.
இந்த பட டீசரில் அசால்ட்டாக 10 பேரை முதுகில் தாங்கி தூக்கி வீசும் பாலையா, சூலாயுதத்தை கழுத்தில் சுற்றிவிட்டபடி சென்று எதிரே வருபவர்களை எல்லாம் சிதறவிடுகிறார். இதுபோன்ற அறிவியலோடு போட்டி போடும் காட்சிகள் குறித்து பாலையா பேசியுள்ளார்.
அதில் அவர் “எனது ரசிகர்கள் அதிரடி படங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்கள். அவர்களை எளிதில் திருப்தி படுத்தவே முடியாது. எனது படங்களின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால், அவர்கள் விரும்பும்படியான ஆக்ஷன் காட்சிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன். அவர்களது விருப்பத்தை பூர்த்தி செய்வதே என் கடமை. அதற்காக எந்த ரிஸ்க்கும் எடுப்பேன்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K