புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ படக்குழு!
மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் மதுர வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இன்னும் அவர் ஹிட் கொடுக்க முடியாமல் போராடி வருகிறார். இவர் நடித்த மதுர வீரன் திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ஓரளவு அவருக்கான அடையாளத்தைப் பெற்று தந்தது.
இந்நிலையில் இப்போது சண்முகபாண்டியன் காட்டையும் யானைகளையும் பின்னணியாகக் கொண்ட படை தலைவன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கியுள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படம் மே 23 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் திரையரங்க ஒதுக்கீட்டில் எழுந்த சிக்கல் காரணமாக கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக சண்முக பாண்டியன் தெரிவித்தார். புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஜூன் 13 ஆம் தேதி படை தலைவன் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.