சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த நடிகர் முருகன் காலமானார்… ரசிகர்கள் அஞ்சலி!
2008 ஆம் ஜூலை 4 ஆம் தேதி சுப்ரமண்யபுரம் திரைப்படம் ரிலீஸானது. பெரிய நடிகர்கள், இயக்குனர், தொழில்நுட்பக் கலைஞர்கள் இல்லாமல் ரிலீஸான அந்த திரைப்படம், அதன் திரைக்கதை மற்றும் உருவாக்கம் காரணமாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் விமர்சனப்பூர்வமாக பாராட்டுகளக் குவித்து ஒரு Cult திரைப்படமாக இப்போது வரை கொண்டாடப்படுகிறது.
படத்தில் சசிகுமார், ஜெய், ஸ்வாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்டவர்கள் நடிக்க, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்ய, ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருந்தார். மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. இதையடுத்து கடந்த ஆண்டு இந்த திரைப்படம் ரி ரிலீஸானது.
இந்த படத்தில் சிறு வேடத்தில் நடித்தவர்கள் கூட ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள். அப்படி மொக்கச்சாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் இலைக்கடை முருகன் என்கிற மொக்கச்சாமி. அந்த படத்தில் அவர் நடிப்பும் அவர் பேசும் வசனமும் இன்றளவும் நினைவு கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தற்போது உடல்நலக் குறைவு காரணமாகக் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 78. அவரது மறைவை ஒட்டி ரசிகர்கள் அவருக்கு சமூகவலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.