மீண்டும் இணையும் ‘ரௌடி பேபி’ கூட்டணி… தனுஷின் அடுத்த படத்தில் சாய்பல்லவி?
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் வெளியான அமரன் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியைப் பெற்று 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த வெற்றி ராஜ்குமார் பெரியசாமியைக் கவனிக்க வைக்கும் இயக்குனராக்கியுள்ளது.
இதையடுத்து அவர் தனுஷ் நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் மதுரை அன்பு செல்வன் தயாரிக்கவுள்ளார். படத்தின் பூஜை நடந்த சில மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை. தனுஷ் தனது இந்தி படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பிஸியாக உள்ளதால் அதை முடித்ததும் இந்த படத்தில் இணைவார் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ராஜ்குமார் பெரியசாமி படத்தின் முன்தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே சாய் பல்லவி தனுஷுடன் இணைந்து மாரி 2 படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.