கமல் ஒன்னும் பெரிய நடிகர்லாம் இல்லை… தேவயானியின் கணவர் ராஜகுமாரன் சர்ச்சைக் கருத்து!
இயக்குனர் விக்ரமன் பட்டறையில் இருந்து வந்து நீ வருவாய் என மற்றும் விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் ராஜகுமாரன். பின்னர் தேவயானியைத் திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் அவர் இயக்கிய படங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை.
இதையடுத்து அவர் சில படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் அவரின் மோசமான நடிப்புக் காரணமாக இணையத்தில் கேலிக்கு ஆளானார். இந்நிலையில் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்னும் படத்தில் காமெடி காட்சி ஒன்றில் ராஜகுமாரனை நடிக்கவைத்து தன் ஸ்டைலில் செம்ம கலாய் கலாய்த்திருந்தார். அந்த காட்சிகள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தன.
இந்நிலையில் சமீபகாலமாக யுடியூபில் நேர்காணல்கள் என்ற பெயரில் சர்ச்சைக்குரியக் கருத்துகளை சொல்லி வருகிறார். முன்னதாக விக்ரம்முக்கு நடிக்கத் தெரியாது என சொன்னவர், இப்போது கமல்ஹாசன் ஒன்றும் பெரிய நடிகர் இல்லை எனக் கூறியுள்ளார். அந்த நேர்காணலில் “கமல்ஹாசனை இந்திய அளவில் பெரிய நடிகர் என்று சொல்வார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர் பெரிய நடிகர் எல்லாம் இல்லை. அவர் நடிச்சதிலேயே நாலஞ்சு படங்கள் அவருக்கு பெயர் சொல்லும்படி அமைஞ்சது. மத்ததெல்லாம் கமர்ஷியல் படம்தான். கமல்னு சொன்னா சப்பாணி, வேலு நாயக்கர் என சில கதாபாத்திரங்கள்தான் ஞாபகத்துல வரும். மத்தபடி எல்லாப் படத்துலயும் கமல்தான் தெரிவார்.” எனக் கூறியுள்ளார்.