1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 16 ஜூன் 2025 (07:54 IST)

காந்தாரா படக்குழுவைத் துரத்தும் சோகம்… ஷூட்டிங்கின் போது படகு கவிழ்ந்து விபத்து!

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகம் என சொன்னாலும் காந்தாரா கதையின் முன்கதைதான் படமாக்குகிறார்கள்.

படத்துக்கு காந்தாரா –சேப்டர் 1 எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி பேசிய இயக்குனர் ரிஷப் ஷெட்டி “காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம்.  இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட உள்ளது. இந்த படத்தில் தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும்.” எனக் கூறியிருந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அடுத்தடுத்து படத்தில் நடித்த துணை நடிகர்கள் சிலர் மரணமடைந்தனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும், திட்டமிட்ட தேதியில் படம் ரிலீஸாகாது என்றும் தகவல்கள் பரவின. ஆனால் அதைப் படக்குழு மறுத்தது. திட்டமிட்டபடி அக்டோபர் 2 ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவித்தது.

இந்நிலையில் தற்போது காந்தாரா ஷூட்டிங்கின் போது மீண்டும் ஒரு விபத்தைப் படக்குழு எதிர்கொண்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள மாணி அணைப் பகுதியில் படப்பிடிப்பு நடந்த போது எதிர்பாராத விதமாக படகு கவிழுந்து நீரில் மூழ்கியுள்ளது. படகில் இருந்த ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் நீந்தியபடி கரைக்கு வந்து உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவத்தால் ஏற்கனவே நடந்த அடுத்தடுத்த துர்சம்பவங்களோடு இணைத்து ரசிகர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.