1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 26 ஏப்ரல் 2025 (09:07 IST)

சென்னைக்குள் இந்த 3 பேரும் நுழையக்கூடாது: காவல் ஆணையா் அருண் அதிரடி உத்தரவு..!

சென்னை பெருநகரில் ரௌடித்தன செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், மூன்று குற்ற பின்னணி கொண்ட ரௌடிகளுக்கு நகரில் நுழைய தடை விதிக்கும் கடுமையான நடவடிக்கையை காவல் ஆணையர் ஏ. அருண் எடுத்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் கீழ், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆனைகுடியை சேர்ந்த ராக்கெட் ராஜா, சென்னை புறநகர் பகுதியில் உள்ள குன்றத்தூர் நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்த லெனின், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் நெடுங்குன்றத்தை சேர்ந்த நெடுங்குன்றம் சூர்யா ஆகியோரை சென்னை நகர காவல் சட்டத்தின் பிரிவு 51(ஏ) அடிப்படையில் நகரத்தில் இருந்து நீக்கப்படும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவு , குறித்து மூன்று நபர்களும் எதிர்வரும் ஒரு வருடத்துக்கு எந்தவொரு விசாரணை காரணமாகவோ, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருப்பதற்காகவோ அல்லாமல், வேறு எந்த காரணத்திற்காகவும் சென்னை வர கூடாது. இந்த தடை விதிப்பை மீறுகிற பட்சத்தில், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

லெனின் மீது 6 கொலை மற்றும் 12 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 28 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. நெடுங்குன்றம் சூர்யா மீது 5 கொலை, 12 கொலை முயற்சி உள்பட 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ராக்கெட் ராஜா மீது 5 கொலை, 6 கொலை முயற்சி உள்பட 20 வழக்குகள் உள்ளன.

Edited by Mahendran