லோன் ஆப் நெருக்கடி.. தாயிடமே தங்க செயினை பறித்த மகன்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!
லோன் ஆப்பில் கடன் வாங்கி, அதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, பெற்ற தாயிடமே தங்கச் செயினை பறித்த மகன் குறித்த சம்பவம், சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த எபின் என்பவர், தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், லோன் ஆப் மூலமாக லட்சக்கணக்கில் கடன் வாங்கிய அவர், அந்த லோனை திருப்பிச் செலுத்த முடியாமல் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளார்.
லோன் ஆப்பைச் சேர்ந்தவர்கள், அவருடைய புகைப்படத்தை நிர்வாணமாக மாற்றி, பல தரப்பினருக்கு அனுப்பிய நிலையில், வேறு வழியின்றி அவர் தாயிடமே தங்கச் செயினை பறித்ததாக தெரிகிறது. முகமூடி அணிந்து, அவர் தாயிடம் இருந்து செயினை பறித்தபோது அவரது வீட்டு நாய் குரைக்கவில்லை.
இதுகுறித்து எபினின் தாயார் போலீசில் புகார் செய்தபோது, நாய் குரைக்கவில்லை என்ற தகவலால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து எபினை விசாரித்த போது, அவர் தாயிடமிருந்து செயினை பறித்ததை ஒப்புக்கொண்டார். மேலும், தனது தாயிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
ஆனாலும், வழக்கு பதிவு செய்யப்பட்டதால், எபினை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். மேலும், எபினை மிரட்டிய லோன் ஆப் தரப்பினர்மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran