ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா
அதிமுக கட்சி தற்போது பலவீனமாகத்தான் இருக்கிறது என்றும், அதனை களையவே தான் இருப்பதாகவும் வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்தது உண்மைதான் என்றும், ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவருவோம் என்றும் உறுதியளித்துள்ளார்.
"அதிமுக இப்போதும் பலவீனமாகவே உள்ளது. அதை சரிசெய்வதுதான் என்னுடைய பணி. அதை செய்யாவிட்டால் மக்களுக்கு அதிக சிரமம் ஏற்படும். அதிமுகவில் நிலவும் சிக்கல்களை புதிதாக வந்தவர்களால் தீர்க்க முடியாது. அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே அதை சாதிக்க முடியும். அரசியலில் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். சிலர் அரசியலுக்கு வந்துவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால், இதில் இருப்பவர்களுக்குத்தான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்," என்று சசிகலா கூறினார்.
மேலும், "தி.மு.க. அரசு வெற்று விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறது. இது மக்களுக்கும் இப்போது புரிந்துவிட்டது. தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கும் தி.மு.க.வின் கனவு நிறைவேறாது," என்று அவர் தெரிவித்தார்.
சசிகலாவின் இந்த கருத்துக்கள், அதிமுகவில் பிளவுபட்டுள்ள தலைவர்களுக்கு இடையே மீண்டும் ஒரு இணக்கத்திற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran