சென்னையில் வெறும் ஒரு ரூபாய்க்கு மெட்ரோ, பேருந்து டிக்கெட் ! யார் யார் பயன்படுத்தலாம்?
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'சென்னை ஒன்' செயலி மூலம் மெட்ரோ ரயில், புறநகர் ரயில் மற்றும் மாநகர பேருந்துகளுக்கான பயணச் சீட்டுகளை வெறும் ஒரு ரூபாய்க்கு பெறும் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
நாட்டிலேயே முதல்முறையாக, வெவ்வேறு போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துவோர், இந்த செயலி மூலம் ஒரே டிக்கெட்டை பெறும் வசதி இருப்பதால், இது சென்னை மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
'சென்னை ஒன்' செயலியின் பயன்பாட்டை அதிகரிக்கவும், பயணிகளுக்கு ஊக்கமளிக்கவும் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, சென்னை மெட்ரோ, புறநகர் ரயில் அல்லது மாநகரப் பேருந்துகளில் ஏதேனும் ஒன்றில் முதல்முறையாக பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒரு ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த குறைந்த கட்டண சலுகை, கூகிள் பே, போன் பே போன்ற BHIM பேமண்ட் மூலம் பணம் செலுத்தும் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என்று சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran