1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 18 ஜூன் 2025 (12:13 IST)

6 வழிச்சாலையாக மாறும் சென்னை மெரீனா கடற்கரை சாலை.. சிலைகள் என்ன ஆகும்?

marina
சென்னை மெரினா கடற்கரை சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக இருக்கும் நிலையில், அதை ஆறு வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, சாலை ஓரத்தில் உள்ள ஒன்பது சிலைகளை இடமாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
 
மெரினா கடற்கரைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகரிப்பதை அடுத்து, கூடுதல் வசதிகள் செய்து தர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த வசதிகள் அமைக்கும் பணிகளின் ஒரு பகுதியாகவே, தற்போதுள்ள நான்கு வழிச்சாலை ஆறு வழிச்சாலையாக மாறப்போகிறது. 
இதற்காக, உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை சாலை விரிவுபடுத்தப்பட உள்ளது. ஆறு வழிச்சாலையாக மாற்றியமைக்கும்போது, இடையில் உள்ள ஒன்பது சிலைகளை இடம் மாற்றம் செய்ய மாநகராட்சி முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், எம்.ஆர்.டி.எஸ். இணைப்புத் தெருவை விரிவுபடுத்தவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இத்துடன், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் காமராஜர் சாலை சந்திப்பில் உள்ள மணி முகத்துவாரமும், காமராஜர் சாலையுடன் வி.பி.ராமன் சாலை இணையும் பகுதியும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
 
இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran