வேன் மூலம் நடமாடும் பாஸ்போர்ட் சேவை.. சென்னை மக்கள் பயன்படுத்த அறிவுறுத்தல்..!
பொதுமக்கள் பாஸ்போர்ட் சேவைகளை இனி எளிதாகப் பெறலாம்! குறிப்பாக, தொலைதூரப் பகுதிகளிலும், குறைந்த வசதிகளுடன் வாழும் மக்களுக்கும் பாஸ்போர்ட் சேவைகளை எளிதாக்கும் நோக்கில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சென்னையில் பாஸ்போர்ட் நடமாடும் வேன் சேவையை தொடங்கியுள்ளது.
இந்த சேவை குறித்துப் பேசிய பாஸ்போர்ட் அதிகாரிகள், "தற்போதுள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் மற்றும் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் தவிர, கிராமப்புற விண்ணப்பதாரர்களின் வீட்டு வாசலிலேயே பாஸ்போர்ட் சேவைகளை வழங்குவதே இந்த நடமாடும் வேன் சேவையின் முக்கிய நோக்கம். இனி பாஸ்போர்ட் பெறுவதற்காக மக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியதில்லை" என்று தெரிவித்தனர்.
இந்த நடமாடும் பாஸ்போர்ட் வேன் முதலில் தாம்பரத்தில் நிறுத்தப்படும். அதன்பின்னர், பாஸ்போர்ட் பெறுவதற்கான தேவைகள் அதிகமாக உள்ள மற்ற பகுதிகளுக்கும் செல்லும். பாஸ்போர்ட் சேவைகளை பெற, வழக்கம் போல் 'பாஸ்போர்ட் சேவா போர்ட்டல்' மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்றும் அதிகாரிகள் கூறினர்.
இந்தச் சேவை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran