1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (18:24 IST)

மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே வக்ப் மசோதா: பிரதமர் மோடி கருத்து

PM Modi speech
மத்திய அரசு கொண்டுவந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டு வருகின்றன.
 
இந்த நிலையில், மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் என்றும், நாட்டின் சமூக, பொருளாதார நீதி மற்றும் அனைவருக்கும் உள்ளடக்கிய வளர்ச்சியில் இது ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
பல ஆண்டுகளாக வக்பு அமைப்பிடம் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருந்த நிலையில், இந்த மசோதா மூலம் மக்களின் உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும், ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்திற்கும் முன்னுரிமை அளிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
இதன் மூலம், நாம் இரக்கமுள்ள வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பதிவாகி வருகின்றன.
 
Edited by Siva