கர்னல் சோபியா குறித்து சர்ச்சை கருத்து: பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மே 7ம் தேதி இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கி, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது. இந்த நடவடிக்கையை விளக்குவதற்காக, வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ராணுவத்தை சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி, விமானப்படை அதிகாரி வியோமிகா சிங் ஆகியோர் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இந்த நடவடிக்கைக்கு பெண் அதிகாரிகள் முக்கியப் பங்கு வகித்ததை பலரும் பாராட்டினர். ஆனால், மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷா, “பயங்கரவாதிகளின் சகோதரியை வைத்து மோடி பழி வாங்கினார்” என கூறியதிலிருந்து விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவருடைய பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. பின்னர், “என் வார்த்தைகள் யாரையும் காயப்படுத்தியிருந்தால், மன்னிப்பு கேட்கிறேன்” என்று அமைச்சர் விளக்கம் அளித்தாலும், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தானாகவே நடவடிக்கையில் ஈடுபட்டு, போலீசுக்கு வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.
இது எதிராக உச்சநீதிமன்றத்தில் அமைச்சா் தொடர்ந்த மனுவை, தலைமை நீதிபதிகள் விசாரணை செய்த நிலையில் “அரசுப் பதவியிலிருப்பவர் இப்படிப்பட்ட கருத்துகள் வெளியிட கூடாது, இது பொறுப்பற்ற செயல்” என கடுமையாக விமர்சித்து, நாளை இந்த மனுவை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
Edited by Siva