மின்வெட்டு என புகார் கொடுக்க வந்த குடியிருப்பாளர்கள்: கட்டையை எடுத்து தாக்கிய பாதுகாவலர்கள் .. அதிர்ச்சி சம்பவம்..
நொய்டாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில், மின்சாரம் தடைபட்டது குறித்து புகார் அளித்த மக்களை, பராமரிப்பு பணியாளர்களும் பாதுகாவலர்களும் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், பாதுகாவலர்களும் மற்ற பணியாளர்களும் குடியிருப்பாளர்களை கம்புகளால் அடிப்பதும், குழந்தைக்கு முன்னாலேயே சிலர் அவர்களை குத்துவதும், உதைப்பதும் பதிவாகியுள்ளது.
பல மணி நேரம் மின்சாரம் இல்லாததால் ஆத்திரமடைந்த குடியிருப்பாளர்கள், பராமரிப்பு ஊழியர்களை அணுகினர். ஆனால், ஊழியர்கள் எந்த தகவலையும் தராததால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, ஊழியர்களும் சில பாதுகாவலர்களும் வன்முறையில் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களில் ஒருவர் கூறுகையில், "இரண்டு, மூன்று மணி நேரம் மின்சாரம் இல்லை. ஊழியர்கள் போன் எடுக்காததால், கீழே வந்தோம். அங்கே ஏற்கெனவே சிலர் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, சில ஊழியர்கள் எங்களை தாக்க தொடங்கினர். ஒருவர் என் சட்டையை பிடித்துக்கொண்டிருக்க, மற்றவர்கள் கம்புகளால் தாக்கினர். என் உடலெல்லாம் வீங்கிவிட்டது. என் குழந்தைகள் ஒரு மூலையில் அழுதுகொண்டிருந்தார்கள்," என்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, பராமரிப்பு துறையைச் சேர்ந்த ரவீந்திரா, சோஹித், சச்சின் குந்தல், மற்றும் விபின் கசானா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியபோது "தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து, வழக்குப்பதிவு செய்து, குடியிருப்பாளர்களை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்தோம்," என்றார்.
Edited by Mahendran