ஆண் நண்பரின் கண்முன்னே இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.. பீச்சில் நடந்த சம்பவத்தில் 8 பேர் கைது..!
ஒடிசா மாநிலத்தில், 20 வயது இளம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பர் கண்முன்னே கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, நேற்று முன் தினம் மாலை, அவர் தனது ஆண் நண்பருடன் பண்டிகையை கொண்டாட கோபால்பூர் கடல் கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு ஓர் ஒதுக்குப்புறமான இடத்தில் அவர்கள் அமர்ந்திருந்தபோது, மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல் அவர்களை சூழ்ந்துள்ளது.
அந்தக் கும்பல், இருவரையும் புகைப்படம் எடுத்து, அவற்றை ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளது. பின்னர், அந்த ஆண் நண்பரை தாக்கி, அவரது கைகளை கட்டிப்போட்டுள்ளனர். அதன்பிறகு, அந்தப் பெண்ணை அருகிலிருந்த பாழடைந்த வீட்டிற்கு இழுத்து சென்று, அங்கு அவர்களில் மூன்று பேர் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த கொடூரமான சம்பவத்திற்கு பிறகு, பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது நண்பரும் கோபால்பூர் காவல் நிலையத்தை அடைந்து நடந்ததை விளக்கினர். தகவலறிந்து விரைந்த காவல்துறை, உடனடியாக விசாரணையை தொடங்கி, குற்ற நடந்த இடத்தை பார்வையிட்டுள்ளது.
"இதுவரை, இந்த வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அனைவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சிலர் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்பதையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்," என்று பெர்ஹாம்பூர் காவல் கண்காணிப்பாளர் சரவண விவேக் எம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Edited by Mahendran