1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 26 ஜூன் 2025 (14:08 IST)

நடிகைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளை கைவிடுகிறோம்: சிறப்பு விசாரணை குழு அறிவிப்பு..!

Kerala Court
நடிகைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 35 வழக்குகளை கைவிடுவதாகச் சிறப்பு விசாரணை குழு கேரளா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னணி நடிகர் திலீப் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை நடந்துகொண்டிருந்த நிலையில், மேலும் சில மலையாள நடிகைகளும், பெண் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களுக்கும் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக கூறி புகார் அளித்தனர். 
 
இது குறித்து நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் 2019 ஆம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் இடம்பெற்று இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இது குறித்து ஆய்வு செய்யச் சிறப்பு விசாரணை குழுவை கேரள உயர் நீதிமன்றம் அமைத்தது.
 
இந்த நிலையில், ஹேமா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட 35 வழக்குகள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், இந்த வழக்குகளைக் கைவிடுவதாகவும் சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் குறித்து ஆர்வம் காட்டவில்லை என்றும், அதனால்தான் இந்த வழக்குகளை கைவிடுகிறோம் என்றும் சிறப்பு விசாரணை குழு தெரிவித்தது.
 
சிறப்பு விசாரணைக் குழுவின் இந்த கருத்தை கேட்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது. 
 
Edited by Mahendran