ஆர்.எஸ்.எஸ்ஸும் தலிபானும் ஒரே மனநிலை: சித்தராமையாவின் மகன் சர்ச்சை பேச்சு; கொந்தளிக்கும் பா.ஜ.க!
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திர சித்தராமையா, பா.ஜ.க.வின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஆப்கானிஸ்தானின் தலிபானுடன் ஒப்பிட்டு பேசியது பெரும் புயலை கிளப்பியுள்ளது.
யதீந்திரா பேசுகையில், "ஆர்.எஸ்.எஸ். மற்றும் தலிபான் இரண்டும் ஒரே மதத்தில் ஒரே ஒரு கருத்து மட்டுமே இருக்க வேண்டும் என்று நம்புகின்றன. தலிபான் போல, ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்து மதத்தை ஒரே வழியில் வைத்திருக்க விரும்புகிறது" என்று குற்றம் சாட்டினார். மேலும், கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். ஒரு தன்னார்வ அமைப்பாக அல்லாமல் சட்டப்படி பதிவு செய்யப்பட்டு அதன் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அவருக்கு ஆதரவாக பேசிய அமைச்சர் பிரியங்க் கார்கே, ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளுக்கு அரசு நிறுவனங்கள் மற்றும் பொது வளாகங்களில் தடை விதிக்கக் கோரி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த கர்நாடக பா.ஜ.க. தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, "ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசியவாத சித்தாந்தத்தை காங்கிரஸ் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. கார்கே இத்தகைய கடிதம் எழுதியதன் மூலம் தனது முட்டாள்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
Edited by Siva