இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினையால் சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் பாகிஸ்தான் பஞ்சத்தை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு பல தடைகளை விதித்த இந்தியா, 1960 முதலாக பின்பற்றி வந்த சிந்துநதி நீர் ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது. பாகிஸ்தானின் பெரும்பான்மையான விவசாயம், மங்க்லா, டர்பேலா அணைகளில் இருந்து கிடைக்கும் நீரில் இருந்துதான் நடக்கிறது.
இந்த மங்க்லா அணை ஜீலம் நதியிலிருந்தும், டர்பேலா அணை சிந்து நதியில் இருந்தும் தண்ணீரை பெறுகின்றன. இந்நிலையில் தற்போது சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் இந்த அணைகளில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது.
பாகிஸ்தானியர்களுக்கு கரீப் அறுவடைக்காலம் விவசாயத்தில் முக்கியமான காலக்கட்டமாகும். தென்மேற்கு பருவமழையை ஒட்டி வரும் இந்த கரீப் அறுவடை காலத்தில் பாகிஸ்தானுக்கு தேவையான உணவுப் பொருட்கள், தானியங்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. ஆனால் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் பல பகுதிகளில் விவசாயமே நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த பருவக்கால அறுவடை பொய்த்து போனால், வரும் மாதங்களில் பாகிஸ்தான் பெரும் உணவு தட்டுப்பாட்டை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது. ஏற்கனவே பொருளாதார மந்தநிலையில் உள்ள பாகிஸ்தான், உணவுப்பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தாலும் அதன் விலை பன்மடங்கு இருக்கும், சாமானியர்கள் வாங்க முடியாது என்ற பீதி எழுந்துள்ளது.
ஆனால் இந்தியா முற்றிலுமாக தண்ணீர் பகிர்வை நிறுத்தாமல் அளவை மட்டுமே குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி கடந்த ஆண்டு இதே நாளில் பாகிஸ்தான் 1.43 லட்சம் க்யூபிக் தண்ணீரை பெற்ற நிலையில், இந்த ஆண்டு 1.14 லட்சம் க்யூபிக் தண்ணீரை பெற்றுள்ளது. அளவில் இது மிகவும் குறைந்த விகிதாச்சாரமே என்று கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K