அஜர்பைஜானில் இனி படப்பிடிப்பு இல்லை.. பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்ததால் சிக்கல்..!
பல இந்தியத் திரைப்படங்கள் அஜர்பைஜானில் படமாக்கப்பட்ட நிலையில், இனிமேல் அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடத்த மாட்டோம் என இந்தியத் திரையுலகினர் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் இருந்தபோது, துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய இரண்டு நாடுகளும் வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தன. இந்த நிலையில், துருக்கிக்கு எதிராக ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து ட்ரெண்டிங்கில் இருக்கும் நிலையில், தற்போது அஜர்பைஜானுக்கு எதிராகவும் இந்திய மக்கள் கொந்தளித்துள்ளனர்.
அஜித் நடித்த 'விடாமுயற்சி' உள்பட பல திரைப்படங்கள் அஜர்பைஜானில் படமாக்கப்பட்ட நிலையில், இனிமேல் அஜர்பைஜானில் எந்தவிதமான படப்பிடிப்பும் நடத்தப்படாது என இந்தியத் திரையுலகம் தெரிவித்துள்ளது. அஜர்பைஜானுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது எனவும், சுற்றுலாவை ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் கூறியுள்ளன.
துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் பலர் ரத்து செய்து வருவதாகவும், இந்த நாடுகளுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்வது கடினம் தான் என்றும் கூறப்பட்டு வருகின்றது.
ஆனால் அதே நேரத்தில், இந்தியா அதிக அளவு கச்சா எண்ணெயை அஜர்பைஜானில் இருந்து இறக்குமதி செய்து வருவதால், அதை நிறுத்துவது என்பது எளிதானது அல்ல என்றும் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Edited by Siva