ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடுதாரரும், நாமினியும் உயிரிழப்பு.. யாருக்கு இழப்பீடு வழங்குவது?
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் பாலிசிதாரரும், அவர் நியமித்த நாமினியும் ஒரே விபத்தில் உயிரிழந்திருப்பதால், தற்போது யாருக்கு இழப்பீடு வழங்குவது என்ற சிக்கலை காப்பீட்டு நிறுவனங்கள் சந்தித்துள்ளன.
சமீபத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து ஏற்பட்டவுடன், இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் காப்பீடு செய்தவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க அறிவுறுத்தியது.
இந்தச் சூழலில்தான், காப்பீடு எடுத்துக் கொண்ட பாலிசிதாரர் மற்றும் அவர் நியமனம் செய்த நாமினி ஆகிய இருவருமே விமான விபத்தில் உயிரிழந்ததால், இழப்பீடு தொகையை யாரிடம் வழங்குவது என்று காப்பீட்டு நிறுவனங்கள் குழப்பத்தை சந்தித்துள்ளன.
பொதுவாக, கணவர் மனைவியை நாமினியாகவும், மனைவி கணவரை நாமினியாகவும் நியமித்திருப்பார்கள். ஆனால் இந்த விவகாரத்தில், கணவன் மனைவி இருவரும் இறந்துள்ளதால், இழப்பீட்டை யாருக்கு வழங்குவது என்பது ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக காப்பீட்டு நிறுவனங்கள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளன. நாமினிக்கு அடுத்தபடியாக, அந்தக் குடும்பத்தில் நெருக்கமானவர்கள் யார் என்பதை அறிந்து, அவர்களுக்கு இழப்பீடு வழங்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கூறியுள்ளன. இது இறந்தவர்களின் குடும்பங்களுக்கு விரைவில் இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்யும் ஒரு நடவடிக்கையாகும்.
Edited by Siva