தமிழ்நாட்டில் கூட்டணி அரசு தான்.. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி தான்.. அமித்ஷா
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றும், அங்கு கூட்டணி ஆட்சிதான் நடைபெறும் என்றும், ஆனால் அதே நேரத்தில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்றும் அமைச்சர் அமித்ஷா மீண்டும் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி உருவானதிலிருந்தே அமித்ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் என்பதை வலியுறுத்தி வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் நடைபெறும் என்றும், ஆனால் அதே நேரத்தில் இந்த கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமிதான் தலைவர் என்றும், அவரது தலைமையில் தான் ஆட்சி அமையும் என்றும் கூறி வருகிறார்.
இந்த நிலையில் மீண்டும் இது குறித்து பேசிய அவர், 2026 தேர்தலில் வென்று தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றும், அதில் பாரதிய ஜனதா கட்சி கண்டிப்பாக அங்கம் வகிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில், அ.தி.மு.க-விலிருந்துதான் முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார் என்றும், கட்சியில் இருந்து பிரிந்தவர்களை நாங்கள் ஒன்றிணைக்க முயற்சிக்கவில்லை என்றும், அது அவர்களது உட்கட்சி விவகாரம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் மீண்டும் கூட்டணி ஆட்சி என அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ஜ.க வலியுறுத்தி வரும் நிலையில், தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் அதே போன்ற ஒரு ஆசை இருந்தாலும், ஆனால் அதை தைரியமாக வெளிப்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
Edited by Siva