இந்தியா முழுவதும் பல வங்கிகளில் சைபர் மோசடி கும்பல் 8 லட்சத்திற்கும் அதிகமான போலி வங்கி கணக்குகளை தொடங்கி மோசடிகளில் ஈடுபட்டத்தை சிபிஐ கண்டறிந்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் சைபர் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், அதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ள சிபிஐ களமிறங்கியுள்ளது. அவ்வாறாக சைபர் க்ரைம் கும்பல் பணம் அனுப்ப சொல்லி பயன்படுத்தும் வங்கி கணக்குகளை ட்ரேஸ் செய்தபோது அது அடையாளம் தெரியாத நபர்களின் போலி வங்கி கணக்காக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுத்தொடர்பாக தீவிர விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்டதில் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளில் மொத்தம் 8.5 லட்சம் போலி வங்கி கணக்குகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த வங்கி கணக்குகள் போலி அடையாளங்கள் மூலமாக அல்லது வேறு ஒருவரின் அடையாளச் சான்றுகளை திருடி அவருக்கே தெரியாமல் தொடங்கப்பட்டதாக உள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த வங்கி கணக்குகளில் மோசடி செய்து மொத்தமாக பணத்தை எடுக்கும் மோசடியாளர்கள் அதை வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றிவிட்டு கம்பி நீட்டி விடுகின்றனர். இந்த வங்கி கணக்குகள் தொடங்குவதற்கு சில வங்கி ஊழியர்கள், ஏஜெண்டுகளும் உடந்தையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுத்தொடர்பாக ராஜஸ்தான், டெல்லி, அரியானா, உத்தரகாண்ட் என பல மாநிலங்களில் 42 இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் வங்கி ஊழியர்கள், ஏஜெண்டுகள் உள்பட 9 பேரை விசாரணைக்குள் கொண்டு வந்துள்ளனர்.
Edit by Prasanth.K