கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி மேல் வழக்குப் பதிவு… பின்னணி என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி கிரிக்கெட் தவிர, விளம்பரங்கள் நடிப்பது மற்றும் ஹோட்டல்கள் பிஸ்னஸ் என பல துறைகளில் வருவாய் ஈட்டி வருகிறார். அவருக்கு சொந்தமாக ஒன்8 என்ற பெயரில் இந்தியாவின் முக்கியமான நகரங்களில் ஹோட்டல்கள் மற்றும் பப்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ஒன் 8 பப் மீது கூப்பன் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த பப்பில் புகைபிடிப்பதற்கும் மற்றும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் தனியான இடம் அமைக்கப்படவில்லை என்ற காரணத்துக்காக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த பப் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்வது இது முதல் முறை இல்லை. முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு மேல் பப் இயங்கியதாக கடந்த ஆண்டு போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.