கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!
இந்திய அணி இம்மாதம் 20 ஆம் தேதி தொடங்கும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. இந்த தொடருக்காக இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்று அங்கு பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த அணியில் கோலி, ரோஹித் மற்றும் அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள் இல்லாதது பெரியப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இளம் இந்திய அணியை ஷுப்மன் கில் கேப்டனாகப் பொறுப்பேற்று வழிநடத்தவுள்ளார். துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட் பொறுப்பேற்றுள்ளார். இந்த தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட்டுக்கு ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்று சொல்லலாம். இதனால் நடக்கவுள்ள தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், புதிய கேப்டன் கில் பற்றி பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது. அதில் “கடந்த சில ஆண்டுகளாகவே கில் அணியை உற்சாகமாக வைத்துக் கொள்வதில் பங்காற்றியுள்ளார். அவர் கடந்த சில ஆண்டுகளாக கோலி மற்றும் ரோஹித் ஆகியோரிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுள்ளார். ரோஹித்துடன் முக்கியமான நேரங்களில் அவர் நடத்திய விவாதங்களை நான் பார்த்துள்ளேன். கோலி மற்றும் ரோஹித் ஆகியோரிடம் இருக்கும் தகுதிகள் அவரிடம் உள்ளன. அவர் இந்திய அணியை வழிநடத்தத் தயாராகிவிட்டார்” எனக் கூறியுள்ளார்.