சமீபமாக காந்தப்பொருட்கள் ஏற்றுமதியில் சீனா மேற்கொண்டுள்ள மாற்றங்களால் இந்தியாவில் ஆடியோ எலெக்ட்ரானிக்ஸ் துறை பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.
இந்தியாவில் ஆடியோ எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் பல முன்னணி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்படும் தரமான பல ஆடியோ உபகரணங்களுக்கான காந்தப் பொருட்கள் சீனாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் இந்த தாதுக்கள் கொண்டு காந்தப்பொருட்கள் தயாரிக்கப்பட்டாலும், அவை சீனாவை விட பல மடங்கு விலை உயர்ந்தவை.
முக்கியமாக ஆடியோ கருவிகளுக்கான NdFeB காந்தங்கள் சீனாவிடமிருந்தே அதிக அளவில் இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்நிலையில் சீன அரசு சமீபத்தில் அரிய மண் தாதுக்கள் மற்றும் தாதுப் பொருட்களுக்கான ஏற்றுமதியில் புதிய கெடுபிடிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியா ஆடியோ எலெக்ட்ரானிக்ஸ் துறையில் தேவைப்படும் அளவை விட மிகக் குறைவான அளவிலேயே NdFeB காந்தங்கள் பெற முடிகிறது. இதனால் இந்த துறை பெரும் சரிவை சந்தித்து வருவதாக ELCINA - Electronic Industries Association of India எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள இந்த அமைப்பு சீனாவின் புதிய கட்டுப்பாடுகளால் இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்படுவதுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் 21 ஆயிரம் வேலைவாய்ப்புகளை இழக்கும் சூழலும், பொருளாதார சரிவையும் எதிர்கொள்ள நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ளது. சீனாவுடன் பேசி இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது மற்றும் உள்நாட்டில் NdFeB காந்தங்கள் உற்பத்தியை அதிகரிப்பது உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை அரசிடமிருந்து எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Edit by Prasanth.K