இந்திய பொருட்கள் மீது ஏற்கனவே 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 25 சதவீதம் வரியை உயர்த்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி மேலும் 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வரியை விதித்துள்ளார். இந்நிலையில் பல தொழில்துறைகள் முடங்கியுள்ள நிலையில் மாற்று வழிகளை இந்தியா தேடி வருகிறது. அதற்குள் இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அமைச்சர் ஸ்காட் பெசெண்ட் பேசியபோது “அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் சேர்ந்து ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு மேலும் வரிகளை விதித்தால் ரஷ்ய பொருளாதாரம் சரிந்துவிடும். அதிபர் ட்ரம்பும், துணை அதிபர் வான்சும், ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலாவிடம் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்” என்று தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி பார்த்தால் இந்தியா மீதான வரிகளை மேலும் உயர்த்த அமெரிக்கா திட்டமிட்டிருப்பது தெரிய வருகிறது. தொடர்ந்து அமெரிக்கா உயர்த்தி வரும் இந்த வரிகளுக்கு எதிராக இந்தியா என்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். Edit by Prasanth.K