1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 12 ஜூன் 2025 (08:11 IST)

ஒன்பது கிரகங்களில் உச்சம் பெற்ற ஒருவன்… அஜித்தின் அடுத்த படத்துக்கும் சாய் அப்யங்கர்தான் இசையா?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. 250 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கம் மூலமாக வசூல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் கலைத்துறையில் அவர் செய்த பங்களிப்புக்காக இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்’ சமீபத்தில் அளிக்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்டு சென்னைத் திரும்பினார். தற்போது தன்னுடைய கனவான கார் ரேஸ் பந்தயங்களில் மீண்டும் ஈடுபாடு காட்டத் தொடங்கியுள்ள அஜித், வருடத்துக்கு ஒரு படம் என நடிக்கும் முடிவில் உள்ளாராம்.

குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்- ஆதிக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்கவுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

இளைஞர்களுக்குப் பிடித்த இசையமைப்பாளராக உருவாகியுள்ள சாய் அப்யங்கர் வரிசையாக படங்களில் கமிட்டாகி வருகிறார். அவரது ஒரு படம்கூட இன்னும் ரிலீஸாகவில்லை எனும் போதும் அவர் தொடர்ச்சியாக முன்னணிக் கதாநாயகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களில் கமிட்டாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.