தயாரிப்பாளராக கால்பதிக்கும் ரவி மோகன்… எஸ் ஜே சூர்யாவோடு முதல்முறையாகக் கூட்டணி!
ரவி மோகன் நடிப்பில் அடுத்தடுத்து வெளியானப் படங்கள் அனைத்தும் தோல்விப் படங்களாக அமைந்தன. இதற்கிடையில் அவரின் விவாகரத்து செய்தி வெளியாகி அவரைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்தன. கடந்த ஆண்டு ரிலீஸான அவரின் பிரதர் திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது.
இப்போது அவர் கைவசம் ஜீனி, கராத்தே பாபு மற்றும் பராசக்தி ஆகிய படங்கள் உள்ளன. இதில் ஜீனி படம் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்க, கராத்தே பாபு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்நிலையில் ரவி மோகன் தற்போது தயாரிப்பாளராகக் களமிறங்கவுள்ளார். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் முதல்படமாக டிக்கிலோனா மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.