சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து மன்னிப்புக் கேட்டேன்... ஆர் ஜே பாலாஜி பகிர்ந்த சம்பவம்!
பண்பலை தொகுப்பாளராக இருந்த ஆர் ஜே பாலாஜி தமிழ் சினிமாக்களைக் கண்டபடி வறுத்தெடுத்து விமர்சனம் செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பிறகு அவருக்கு ‘தீயா வேல செய்யணும் குமாரு’ படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன் பிறகு அவர் நடித்த நானும் ரௌடிதான் படம் அவரைப் பிரபல நடிகராக்கியது.
அதன் பின்னர் எல் கே ஜி படத்தில் கதாநாயகனாக நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவர் இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வரிசையில் இப்போது அவர் சித்தார்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சொர்க்கவாசல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நவம்பர் 29 ஆம் தேதி ரிலீஸாகிறது.
அதன் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் ஆர் ஜே பாலாஜி தான் செய்த தவறு ஒன்றுக்காக சிவகார்த்திகேயனிடம் மன்னிப்புக் கேட்டது பற்றி பேசியுள்ளார். அதில் “சிவகார்த்திகேயன் ஒரு மேடையில் விருது வாங்கும்போது அழுது எமோஷனலாகப் பேசியிருந்தார். அதை நான் என்னுடைய நிகழ்ச்சியில் கேலி செய்து பேசியிருந்தேன். அந்த நிகழ்ச்சி எடுக்கும்போது எனக்குத் தவறாக தெரியவில்லை. ஆனால் அது ஒளிபரப்பான போது வருத்தமாக இருந்தது. அதனால் நான் சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து மன்னிப்புக் கேட்டேன்” எனக் கூறியுள்ளார்.