உயிரே உறவே தமிழே என்று பேசியதற்கான அர்த்தத்தை உணர்கிறேன் –தமிழ்நாட்டிற்கு நன்றி தெரிவித்த கமல்!
கடந்த வாரம் நடந்த தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன் சிவராஜ் குமாரிடம் என் குடும்பத்தில் அவர் ஒருவர். கர்நாடகாவில் இருக்கும் எனது குடும்பம் அவர். தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது. அதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்” என்று பேசினார்.
இது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை உருவாக்கி சர்ச்சைகளைக் கிளப்பியது. தனது வார்த்தைகளுக்காகக் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்கவேண்டும் என கண்டனங்கள் எழுந்தன. இதன் காரணமாக தக்லைஃப் வெளியீடு கர்நாடக மாநிலத்தில் சிக்கல் ஆனது. இதை அடுத்து, கமல்ஹாசன் தக்லைஃப் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்றமும் அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என சொல்ல, கமல் “நான் தவறு செய்திருந்தால் மன்னிப்புக் கேட்டிருப்பேன். தவறாகப் புரிந்துகொண்டதற்கு எதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும்” என மறுத்துவிட்டார். இந்த விஷயத்தில் கமல் மன்னிப்புக் கேட்கக் கூடாது என்று தமிழகத்தில் இருந்து பெரிய அளவில் அவருக்கு ஆதரவுக்குரல்கள் எழுந்தன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசும்போது “உயிரே உறவே தமிழே என்று பேசியதற்கான அர்த்தத்தை உணர்கிறேன். உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி. இன்னும் நிறையப் பேசி வேண்டியுள்ளது. ஆனால் அது இந்த படத்தைப் பற்றியல்ல. அதைப் பற்றி நேரம் ஒதுக்கி பேசவேண்டியது தமிழனாக என்னுடையக் கடமை” எனக் கூறியுள்ளார்.