அன்பறிவ் சகோதரர்களை இயக்குனர்களாகத் தேர்வு செய்தது ஏன்?.. கமல் அளித்த பதில்!
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' படம் ஜூன் 5 ஆம் தேதி இன்று ரிலீஸாகியுள்ள நிலையில் மிகப்பெரிய அளவில் ஓப்பனிங் கிடைத்துள்ளது. இதில் கமல்ஹாசன், சிம்பு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், , அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இதையடுத்து கமல்ஹாசன் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. முதலில் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தோடு இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது இந்த படத்தில் இருந்து லைகா வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குக் காரணம் கமல்ஹாசனின் சம்பளம் மற்றும் பட்ஜெட் ஆகியவை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அன்பறிவ் மாஸ்டர்களை ஏன் இயக்குனராக தேர்வு செய்தேன் என்பது குறித்துக் கமல் ஒரு நேர்காணலில் பதிலளித்துள்ளார். அதில் “அவர்கள் எதையும் திட்டமிட்டு வருவதில்லை. திரைக்கதை என்னக் கேட்கிறதோ அதை செய்கிறார்கள். முன்பு நான் விக்ரம் தர்மா மாஸ்டரை இயக்குனராக ஆக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இப்போது அதை செயல்படுத்துகிறேன். அன்பறிவ் மாஸ்டர்கள் ஜால்ராவை சாமி ரூமில் வைத்துவிட்டு வந்துடுவாங்க. இங்கு பஜனைக்கு வேலையே இல்லை. அதனால் எனக்கு அவங்களைப் பிடித்தது” எனக் கூறியுள்ளார்.