அஜித்- ஆதிக் படத்தில் இருந்து விலகினாரா தயாரிப்பாளர் ராகுல்?- களமிறங்குகிறதா ரிலையன்ஸ்?
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். கடந்த 15 ஆண்டுகளாக தன்னுடைய பட சம்மந்தமான விளம்பர நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்துகொள்வதில்லை.ஆனாலும் அவரது படங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஓப்பனிங்கும் வசூலும் கிடைக்கின்றன. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. 250 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கம் மூலமாக வசூல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து தனது அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனையே இயக்க நியமித்துள்ளார். படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மற்ற எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக ராகுல் தயாரிக்கவுள்ளார் என்றும் சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் இப்போது அவர் இந்த படத்தைத் தயாரிப்பாளர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தைத் தயாரிக்க அஜித் தரப்பு மும்பையில் முகாமிட்டு ரிலையன்ஸ் குழுமத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் அஜித்தின் அஜித்குமார் ரேஸிங் அணிக்கு ரிலையன்ஸின் கேம்பா கோலா கிளை நிறுவனம் ஸ்பான்சராக ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.