சென்னை - மதுரை விமான கட்டணம் 4 மடங்கு உயர்வு.. பயணிகள் அதிர்ச்சி..!
இந்த வார இறுதியில் விமானத்தில் பயணம் செய்ய திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. சென்னையிலிருந்து மதுரை செல்லும் விமானங்களின் கட்டணம் நான்கு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பயணிகளை அதிர வைத்துள்ளது.
ஜூன் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் வார இறுதி விடுமுறையை கொண்டாட சொந்த ஊர் செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றபோது, கட்டணம் நான்கு மடங்கு உயர்ந்திருப்பதை கண்டு பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சாதாரணமாக சென்னையிலிருந்து மதுரைக்கு விமானக் கட்டணம் ரூ.4,000 என்று இருந்த நிலையில், தற்போது அது ரூ.16,000 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், சென்னை - தூத்துக்குடி விமான கட்டணமும் ரூ.5,360 இல் இருந்து ரூ.10,993 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை - கோவை கட்டணம் ரூ.3,500 இல் இருந்து ரூ.10,000 வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், சென்னை - கொச்சி விமான கட்டணம் ரூ.3,500 இல் இருந்து ரூ.10,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், சென்னை - திருவனந்தபுரம் விமான கட்டணம் ரூ.11,000-க்கும் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பண்டிகைக் காலங்கள், சுப தினங்கள், விடுமுறை நாட்களில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வதை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Edited by Mahendran