தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் நீக்கவேண்டும்… பாகிஸ்தான் சென்சார் அழுத்தம்… அமீர் கான் எடுத்த முடிவு!
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர்கான். வணிக ரீதியானப் படங்கள் மற்றும் கதையம்சம் உள்ள படங்கள் என இரண்டிலும் மாறி மாறி நடிக்கக் கூடிய ஒரு நடிகர். அதே நேரம் சினிமா வியாபாரத்தை எப்படியெல்லாம் பெருக்கலாம் என்பது குறித்தும் தொடர்ந்து பேசி வருபவர்.
இவர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தன்னுடைய டங்கல் படத்தை பாகிஸ்தானில் ரிலீஸ் செய்ய முயற்சித்த போது எழுந்த சிக்கல் பற்றி பேசியுள்ளார். அதில் “பாகிஸ்தான் சென்சார் அதிகாரிகள் படத்தில் தேசிய கொடி இடம்பெறும் காட்சியையும், இறுதியில் தேசிய கீதம் ஒலிக்கும் காட்சியையும் நீக்கவேண்டும் எனக் கூறினர். ஆனால் நான் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் என் படம் பாகிஸ்தானில் ரிலீஸாகவில்லை என்றாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு வெளியான அமீர்கானின் டங்கல் திரைப்படம் மல்யுத்த வீராங்கனை ஒருவரின் வாழ்க்கையை ஒட்டி உருவாக்கப்பட்டது. அந்த வீராங்கனையின் தந்தையாக அமீர்கான் நடித்திருந்தார். இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.