சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..
கடந்த 2014 ஆம் ஆண்டு, பஞ்சாப் ஒரு ஐபிஎல் போட்டியில் ஜெயித்தபோது, சல்மான் கான் வாழ்த்து தெரிவித்து போட்ட ட்வீட் எப்போதெல்லாம் பஞ்சாப் ஜெயிக்கிறதோ, அப்போதெல்லாம் அது வைரல் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று நடந்த மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில், பஞ்சாப் அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிவடைந்த சில நிமிடங்களில், சல்மான் கான் கடந்த 2014 ஆம் ஆண்டு போட்ட ட்வீட் திடீரென வைரலாகியது. "ப்ரீத்தி ஜிந்தா டீம் ஜெயித்து விட்டது" என்று சல்மான் கான், கடந்த 2014 ஆம் ஆண்டு ட்வீட் போட்டிருந்தார்.
எப்போதெல்லாம் பஞ்சாப் ஜெயிக்கிறதோ, அப்போதெல்லாம் அது வைரல் ஆகிறது என்றும், இது ஒரு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ட்வீட் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
அதேபோல், ப்ரீத்தி ஜிந்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை பாராட்டும் ஒரு பழைய ட்வீட்டும் வைரல் ஆகி வருகிறது. "அற்புதமான கேப்டன், மிகவும் தந்திரம் மிக்கவர், மைதானத்தில் ஆக்கிரமிப்பு கொண்டவர். அவர் வெளியே எளிமையாக, மென்மையாக பேசுவார். ஆனால், கேப்டனாக ஆக்ரோஷமாக இருப்பார். ஏலத்தின் போது அவர் தான் எங்களது முதல் தேர்வாக இருந்தார்" என்று தெரிவித்துள்ளார்.
கோப்பைக்கு, இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டும் இருக்கும் நிலையில், ப்ரீத்தி ஜிந்தாவை சந்தோஷப்படுத்தும் வகையில், கோப்பையை ஸ்ரேயாஸ் வென்று தருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Mahendran