பாமகவில் அன்புமணி - ராமதாஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
அப்போது அவர் “எனக்கும் அன்புமணிக்குமான சமாதான பேச்சுவார்த்தை ட்ராவில் முடிந்துவிட்டது. நான் இங்கே இருந்து கொண்டு கட்சியை பார்க்க வேண்டும், அன்புமணி வெளியே இருந்து கட்சியை கவனிப்பார் என தீர்ப்பு சொன்னார்கள். ஆனால் அன்புமணி என்ன நம்ப முடியாது என சொல்லிவிட்டார்.
அன்புமணியை கட்சியை விட்டு வெளியேற்ற நான் என்ன முட்டாளா? தந்தைக்கு பின் தனயன். ராமதாஸுக்கு பிறகு அன்புமணி என்பதே எல்லாரும் சொல்லும் வார்த்தை. ஓரிரு ஆண்டுகள் பொறுத்திருந்தால் நானே அன்புமணிக்கு முடிச்சூட்டு விழா நடத்தி இருப்பேன். குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம். ஆனால் தந்தயை மீறிய தனயன் இருக்கக் கூடாது.
என்னையே குறிவைத்து தாக்குகின்றனர். ராமதாஸ் அய்யாதான் எல்லாமே என்று சொல்லிக்கொண்டே அதள பாதாளத்தில் தள்ள பார்க்கிறார்கள். குலசாமி என சொல்லிக் கொண்டே என் நெஞ்சுக்குலையில் குத்துகிறார்கள். என் கைகளைக் கொண்டே என் கண்ணை நான் குத்திக் கொண்டேன்.
எனக்குள் இருந்த கோவம் பொங்கி எழுந்தது. இந்த கட்சியை உருவாக்கிய நான் இன்னும் சில ஆண்டுகள் தலைமை தாங்க கூட எனக்கு உரிமை இல்லையா? நானே தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க தயார் என்று சொன்னால், நம்பமாட்டேன் எழுதிக் கொடுங்கள் என்கிறார் அன்புமணி” என வருத்தம் தெரிவித்து பேசியுள்ளார்.
Edit by Prasanth.K