1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: வியாழன், 12 ஜூன் 2025 (09:37 IST)

கீழடிக்கு ஆதாரம் கேட்கிறாங்க.. ராமருக்கு என்ன ஆதாரம்? - வைரமுத்துவின் வைரல் கவிதை!

vairamuthu

கீழடி அகழ்வாய்வு அறிக்கையை மத்திய தொல்லியல்துறை ஏற்காதது குறித்து பேசிய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஷெகாவத், கீழடித் தொன்மையை நிரூபிக்க இன்னும் தரவுகள் தேவை என்று பேசியிருந்தார்.

 

இது வேண்டுமென்றே தமிழர்களின் செறிவார்ந்த கலாச்சாரத் தொன்மையை ஏற்க மறுக்கும் வாதம் என பலரும் விமர்சித்து வந்தனர்.

 

இந்நிலையில் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார் வைரமுத்து. அந்த கவிதையில்

 

ஒன்றிய அமைச்சர்

ஷெகாவத் அவர்கள்

கீழடித் தொன்மையை மெய்ப்பிக்க 

இன்னும் அறிவியல் தரவுகள்

தேவையென்று  சொல்லித்

தமிழர் பெருமைகளைத்

தள்ளி வைக்கிறார்

 

ஒரு தமிழ்க் குடிமகனாக

அமைச்சர் அவர்களுக்கு

எங்கள் அறிவின் வலியைப்

புலப்படுத்துகிறேன்

 

கீழடியின் தொன்மைக்கான

கரிமச் சோதனைகள்

இந்தியச் சோதனைச் சாலையில்

முடிவு செய்யப்பட்டவை அல்ல;

அமெரிக்காவில் ஃபுளோரிடாவின்

நடுநிலையான

சோதனைச் சாலையில்

சோதித்து முடிவறியப்பட்டவை

 

அதனினும் சிறந்த

அறிவியல் தரவு என்று

அமைச்சர் எதனைக் கருதுகிறார்?

 

சில தரவுகள்

அறிவியலின்பாற் பட்டவை;

சில தரவுகள்

நம்பிக்கையின்பாற் பட்டவை

 

ராமர் என்பது ஒரு தொன்மம்

அதற்கு அறிவியல்

ஆதாரங்கள் இல்லை;

நம்பிக்கையே அடிப்படை

 

கீழடியின் தொன்மை என்பதற்கு

அறிவியலே அடிப்படை

 

ராமரின் தொன்மத்தை

ஏற்றுக்கொண்டவர்கள்

கீழடியின் தொன்மையை

ஏற்றுக்கொள்ளாதது

என்ன நியாயம்?

 

தொன்மத்துக்கு ஒரு நீதி

தொன்மைக்கு ஒரு நீதியா?

 

தமிழர்களின் நெஞ்சம்

கொதிநிலையில் இருக்கிறது

 

தமிழ் இனத்தின் தொன்மையை

இந்தியாவின் தொன்மையென்று

கொண்டாடிக் கொள்வதிலும்

எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை

 

"தொன்று நிகழ்ந்த

தனைத்தும் உணர்ந்திடு

சூழ்கலை வாணர்களும் - இவள்

என்று பிறந்தவள் என்றுண ராத

இயல்பின ளாம் எங்கள் தாய்"

என்ற பாரதியார் பாட்டு

எங்கள் முதல் சான்றாக முன்நிற்கிறது

 

மேலும் பல தரவுகள்

சொல்வதற்கு உள்ளன

 

விரிக்கின் பெருகுமென்று

அஞ்சி விடுக்கிறோம்

 

அங்கீகார அறிவிப்பை

விரைவில் வெளியிட வேண்டுகிறோம்

 

என்று தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K