கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பலியில் சதி வேலை நடந்திருப்பதாக தவெக சார்பில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியான சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசும், தவெக தலைவர் விஜய்யும் நிவாரண தொகை அறிவித்துள்ளனர்.
மேலும் இந்த கூட்டநெரிசல் மரணம் குறித்து விசாரிக்க தனி நபர் ஆணையத்தை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மரணத்தில் சதி இருப்பதாக தவெகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தினர் கேட்ட இடத்தை அளிக்காதது, போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்காதது, பிரச்சாரத்திற்கு நடுவே மின்சாரத்தை துண்டித்தது போன்றவற்றால்தான் கூட்ட நெரிசல் பலி ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள தவெகவினர், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியிடம் முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K