8,000க்கும் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி.. தடுமாறும் தமிழக கல்வித்துறை..!
ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறப்பதற்கு முன் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வுடன் இடமாற்றம் ஆகியவை இருந்து வரும் நிலையில், தற்போது சில ஆண்டுகளாக நடந்து வரும் வழக்குகளை காரணம் காட்டி, பதவி உயர்வும், மாறுதல் கலந்தாய்வும் நிறுத்தப்பட்டுள்ளது, ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க ஆசிரியர் தேர்வு கட்டாயமா இல்லையா என்ற வழக்கு நிலுவையில் இருப்பதால், 8,000க்கும் அதிகமான தலைமை ஆசிரியர் இடங்கள் காலியாக இருப்பதாகவும், யாருக்கும் இதுவரை பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அனைத்துப் பள்ளிகளிலும் பொறுப்பு தலைமை ஆசிரியர்களே நிர்வாகத்தை கவனித்து வருவதாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வும் வழங்கப்படாததால், அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 1,500க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காததால், மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்களையும் நிரப்ப முடியவில்லை என்றும், முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் இணை இயக்குநர் பணியிடங்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், தமிழ்நாடு பள்ளிக் கல்வி நிர்வாகம் தடுமாற்றத்தில் இருப்பதாகவும், முதன்மைக் கல்வி அதிகாரிகள் இல்லாத காரணத்தினால் 17 மாவட்டங்களில் கல்விப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து காலியான இடங்களை நிரப்ப வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Edited by Mahendran