சமீபத்தில் மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டத்திற்காக மு.க.ஸ்டாலின் வந்திருந்த நிலையில் சாக்கடை பகுதிகள் திரைச்சீலை கொண்டு மூடப்பட்டிருந்தது குறித்து செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் “முதல்வர் ரோடு ஷோவிற்கு கூட்டப்பட்ட மக்கள் கூட்டம் தானாக சேர்ந்த கூட்டம் அல்ல, செயற்கையாக கூட்டப்பட்ட கூட்டம். மக்கள் நினைத்திருந்தால் லட்சக்கணக்கானோர் கூடியிருப்பார்கள். ஆனால் முதல்வரை காண நடந்து செல்பவர் கூட வரவில்லை.
மதுரையில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. அதில்தான் நடந்து செல்கிறோம். வரிக்கு மேல் வரி விதிப்பவர்கள், முதல்வர் வரும்போது மட்டும் புதிய சாலைகள் போடுகிறார்கள். பந்தல்குடியை பொருத்தவரை ஒருபுறம் இஸ்லாமியர்களும், மற்றொருபுறம் பட்டியலின மக்களும் வாழ்கிறார்கள். இந்த கால்வாயில் திரைசீலை அமைத்தது குறித்து நான் விமர்சனம் செய்தால், தெர்மகோல் விஞ்ஞானியே நீ என்ன செய்தாய் என கிண்டல் செய்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் சாக்கடை நீரை உறிஞ்சி சுத்தம் செய்ய இரண்டரை கோடி மதிப்பில் மறுசுழற்சி செய்யும் அமைப்பை ஏற்படுத்தி மழை நீரை மட்டும் வைகையில் கலக்கும்படியும், சாக்கடை கலக்காதபடியும் செய்தோம்.
திரைச்சீலைகள் அமைக்கப்பட்டதற்கு, யார் கட்டினார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்கிறார். இதுமாதிரியான மாவட்ட ஆட்சியரை நான் பார்த்ததே இல்லை.
மதுரையில் திமுக எப்போதெல்லாம் பொதுக்குழு கூட்டுகிறதோ அப்போதெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது. இதனால்தான் மதுரைக்காரர்கள் என்றாலே திமுக தலைமைக்கு பிடிக்காது. மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடத்தி திமுக தனக்கு தானே சூன்யம் வைத்துக் கொண்டுள்ளார்கள்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K