மதுரையில் பாஜக சார்பில் முருகன் மாநாடு நடத்தப்பட உள்ள நிலையில், அது அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக டெல்லி தலைமை தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பாஜக அதிமுக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். மேலும் மதுரை முருகன் மாநாட்டிற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என பாஜகவினரிடம் அறிவுறுத்தினார்.
இந்த முருகன் மாநாட்டில் உ.பி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவண் கல்யாண் மற்றும் பாஜக பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
பாஜகவின் இந்த முருகன் மாநாடு குறித்து பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் “அவர்கள் முருகனை பற்றி சும்மா ஒப்புக்கு பேசுகிறார்கள். நான் முருகனின் பேரன். உளமாற பேசுகிறேன். நான் முருகனை பார்ப்பதும், பாஜக பார்ப்பதும் வித்தியாசமானது. பாஜக நேற்று ஆரம்பிக்கப்பட்ட கட்சியில்லை. அப்படியிருக்கும்போது இத்தனை நாள் முருகனுக்கு மாநாடு ஏன் அவர்கள் நடத்தவில்லை?
தமிழ்நாட்டு மக்களிடையே முருகனுக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. அதனால் முருகனை தொட்டால் ஓட்டு ஏதாவது கிடைக்குமா என பாஜக பார்க்கிறது. அரசியலுக்காக உத்தர பிரதேசத்தில் ராமரை தொடுவார்கள், கேரளாவில் ஐயப்பன், ஒடிசாவில் பூரி ஜெகன்நாதரை தொட்டார்கள், தமிழ்நாட்டில் முருகனை தொட்டிருக்கிறார்கள்.
ஆனால் இதற்கெல்லாம் ஏமாறுபவர்கள் அல்ல தமிழ்நாடு மக்கள். பாஜக மக்கள் நல அரசியல் செய்யவில்லை, மத அரசியல்தான் செய்துக் கொண்டு இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
Edit by Prasanth.K