ஒரு மாதத்தில் இணைப்பு நடக்காவிட்டால் புதிய கட்சி.. ஓபிஎஸ் ஆதரவாளர் அதிரடி..!
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரனை மீண்டும் கட்சியில் இணைப்பதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தபோது, "அடுத்த ஒரு மாதத்தில் இணைப்பு நடக்காவிட்டால் புதிய கட்சி தொடங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஓ.பி.எஸ். செய்தியாளர்களிடம் பேசியபோது, "தவறான பொதுக்குழு மற்றும் செயற்குழு, தொடர் தோல்வி ஆகியவற்றால் மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் அதிமுக இழந்துள்ளது. அதிமுக ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே தி.மு.க.வை வீழ்த்த முடியும்" என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, அதிமுகவில் தன்னையும் தனது ஆதரவாளர்களையும் சேர்க்காவிட்டால், ஓ.பி.எஸ். புதிய கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva