மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!
மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, கட்சித் தலைமைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மதிமுக, "மகன் திமுகவாக" மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், இதனை எதிர்த்து நாளை சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளார். நீண்ட காலமாகவே மதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்கள் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன.
காஞ்சிபுரத்தில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோருக்கு எதிராக பேசினார்.
வரும் செப்டம்பர் 15 அன்று திருச்சியில் நடைபெற உள்ள அண்ணா பிறந்தநாள் மாநாட்டிற்கு தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
தான் இன்னும் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை என்றும், அடுத்தகட்டமாக ஒரு பெரிய அரசியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம், மதிமுகவில் நிலவி வரும் பிளவை வெளிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
Edited by Mahendran