ஆளுநர் தமிழக மக்கள் மீது வெறுப்பு கொள்கிறாரா? கனிமொழி எம்.பி. ஆவேசம்
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் பேசியதற்கு, தி.மு.க. எம்.பி. கனிமொழி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆளுநரின் இந்த கருத்து, தமிழர்கள் மீது அவருக்கு வெறுப்பு இருக்கிறதா என்ற கேள்வியையும், அவர் ஆளுநராகப் பேசுகிறாரா அல்லது பா.ஜ.க. தலைவராகப் பேசுகிறாரா என்ற சந்தேகத்தையும் எழுப்புவதாக கனிமொழி ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் கட்சிகளுக்குத் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்த நிலையில், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இந்த விருந்தில் பங்கேற்கவில்லை. இந்தச் சூழலில், தமிழக அரசு மீது சில குற்றச்சாட்டுகளை ஆளுநர் முன்வைத்தார். தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இத்தகைய குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
ஆளுநரின் இந்த கருத்துக்கு கனிமொழி எம்.பி. தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்கள் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகியவை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மூன்று மாநிலங்களும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்து இடங்களுக்குள் கூட இடம் பெறாத தமிழ்நாட்டின் மீது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடப்பதாகப் பழி சுமத்தும் ஆளுநருக்குத் தமிழர்கள் மீது அப்படி என்ன வெறுப்பு என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவர் ஆளுநராக பொறுப்பு வகிக்கிறாரா அல்லது பா.ஜ.க. தலைவராகச் செயல்படுகிறாரா என்றும் தனது பதிவில் ஆவேசமாக வினவியுள்ளார். இந்த விவாதம் தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
Edited by Mahendran