பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள்.. விளக்கம் கேட்டு ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்..!
இந்தாண்டு நடைபெற்ற பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் 73,820 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை. இதனை அடுத்து, ஆசிரியர்களிடம் விளக்கம் பெறும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 17ஏ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொத்தம் 1,21,800 பேர் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், அதில் 70% பேர் அரசு பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக திருச்சி, கரூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் வகுப்பு மற்றும் பாட ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. கழகத்தின் பொதுச் செயலாளர் பொ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏற்கெனவே ஆசிரியர்களிடம் கற்றல் சாராத பல பணிகளை ஏற்றி வைத்துள்ளனர். EMIS, நலத்திட்டங்கள், விழாக்கள் என கல்வியைத் தவிர்ந்த பணிகளால் ஆசிரியர்கள் கடும் மன அழுத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்பதோடு விளக்கம் கோரப்படுவது முறையல்ல” எனக் கூறியுள்ளார்.
மேலும், “மாணவர்கள் எதிர்கொள்ளும் சமூகவசதி, குடும்ப பின்னணி போன்றவற்றையும் அரசு கவனிக்க வேண்டும். அரசு உடனடியாக தலையிட்டு ஆசிரியர்கள் மீது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Siva