ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கல்பாக்கம் அருகே கரை கடக்குமா? சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!
சென்னைக்கு அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் சென்னைக்கு தெற்கே கல்பாக்கம் பகுதிக்கு அருகில் கரையை கடக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரமாக கடலோர சென்னைக்கு அருகில் நிலைத்திருந்த 'டெத்வா' புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருக்கிறது. இது அடுத்த 18 மணி நேரமும் சென்னை கடற்கரைக்கு அருகிலேயே நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று முழுவதும் இடைவிடாமல் மழை பெய்யக்கூடும். குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், மாலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்போது, இரவு முழுவதும் மழை நீடிப்பதோடு, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் சில இடங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
Edited by Mahendran