"கூட்டணி பெயரில் எல்லாவற்றையும் இழக்க முடியாது": கே.எஸ். அழகிரி பரபரப்பு பேச்சு
தி.மு.க. கூட்டணி குறித்து பேசிய முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொள்கையுடன் சிறப்பாக செயல்படுகிறார் என்று பாராட்டினாலும், "கூட்டணி என்ற பெயரில் எல்லாவற்றையும் இழந்துவிட முடியாது" என்று அழுத்தமாக தெரிவித்தது, கூட்டணி கட்சிகளிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நடைபெற்ற மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: காங்கிரஸ் அல்லாத முதல்வர்களில், மு.க. ஸ்டாலின் மட்டுமே கொள்கை உறுதியுடன் சிறப்பாக செயல்படுகிறார். அவர் நினைத்திருந்தால் பா.ஜ.க.வுடன் நட்பு பாராட்டி இருக்கலாம். ஆனால், அவர் அதை தவிர்த்துவிட்டு, ராகுல் காந்திக்கு துணையாக நிற்கிறார்.
அதே நேரத்தில் நாம் கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். தமிழக ஆட்சியில் பங்குபெற வேண்டும். எனது இந்தக் கருத்து கூட்டணிக்கு எதிரானதல்ல.
முதலமைச்சர் ஸ்டாலின் மிகச் சிறப்பானவர். அதற்காக கூட்டணி என்ற பெயரில் எல்லாவற்றையும் இழந்துவிட முடியாது. இந்தக் கூட்டணியை தான் விரும்புவதாகவும், அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், அதேபோல் காங்கிரஸும் வளர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Edited by Mahendran