1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 26 ஜூன் 2025 (13:14 IST)

ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்.. 15 பயணிகள் ரயில் ரத்து.. தெலுங்கானாவில் பரபரப்பு..!

தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பெண் தனது காரை ரயில் தண்டவாளத்தில் ஓட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரயில்வே ஊழியர்களும் பொதுமக்களும் பீதியடைந்தனர். அத்துடன், அப்பகுதியில் பல ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் சங்கர்பள்ளி அருகே நிகழ்ந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் 13 விநாடி வீடியோவில், கியா சோனெட் ரக கார் ஒன்று ரயில் தண்டவாளத்தில் ஓடுவதை பார்க்க முடிகிறது. மற்றொரு வீடியோவில், அப்பகுதி மக்களும், ரயில்வே ஊழியர்களும், போலீஸாரும் சேர்ந்து அந்த பெண்ணை காரில் இருந்து வெளியே கொண்டு வர பெரும் போராட்டமே நடத்துகிறார்கள். பெரும் முயற்சிக்குப் பிறகு அவரை வெளியே கொண்டு வந்து கைகளை கட்டியதும், "என் கைகளை அவிழ்த்து விடுங்கள்" என்று அவர் இந்தியில் கத்துவது மூன்றாவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
 
சம்பவத்தை நேரில் கண்டவர்கள், "பல ரயில்வே ஊழியர்களும், போலீஸ் அதிகாரிகளும் காருக்கு பின்னால் ஓடினர். எப்படியோ காரை நிறுத்தினர். அவரை காரில் இருந்து வெளியே கொண்டு வர சுமார் 20 பேர் தேவைப்பட்டனர். அவர் சற்றும் ஒத்துழைக்கவில்லை," என்று தெரிவித்தனர்.
 
ரயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் சந்தனா தீப்தி கூறுகையில், அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தோன்றியது. முதற்கட்ட விசாரணையில், அவர் சமீப காலம் வரை ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தது தெரியவந்துள்ளது. அவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். அவரது ஓட்டுநர் உரிமம் மற்றும் பான் கார்டை வாகனத்தில் இருந்து மீட்டுள்ளோம். 
 
இந்த சம்பவத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு-ஐதராபாத் ரயில் உட்பட  15 பயணிகள் ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. அந்தப் பெண் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
 
Edited by Siva